Oct 5, 2018

பேசாத வார்த்தைகள் : 07092018

பேசாத வார்த்தைகள் : 07092018






ஆந்திராவில் மையம் கொண்டு , தமிழகத்தில் கரை ஒதுங்கிக்கொண்டிருக்கும் “இம்கேம் இம்கேம்” புயலை இரண்டு நாட்களாக பார்த்தும் , கேட்டும் கொண்டிருக்கிறேன் . “கீத கோவிந்தம்” என்ற தெலுங்கு படத்திற்காக கோபி சுந்தர் இசைத்திருக்கும் பாடல் இது . ஐம்பது மில்லியனை கடந்து நூறை  துரத்திக்கொண்டிருக்கிறது யூ டியூப் ஹிட்ஸ் . தமிழ் வெர்ஷன் வேறு வந்திருக்கிறது. சமயங்களில் ஓரளவு சூப்பர் , சூப்பர் டூப்பர் ஹிட் ஆவதும், சூப்பர் டூப்பராக வரவேண்டியது அட்டர் பிளாப் ஆவதும் சகஜம். நம்மூரில் கூட கொலவெறியோடு ரெம்ப பேரு திரிந்தார்கள். சரி போகட்டும் ...! பாடலின் ஒரு பகுதியை சுட்டிக்காட்டி இந்த இசை முப்பத்தாறு வருசத்துக்கு முன்பாக இளையராஜா கோழி கூவுது படத்திற்காக போட்டது என்றும் ( பூவே இளைய பூவே ) அதிலிருந்து சுந்தர் சுட்டிருக்கார் என்றும் ஒரு யூ டியூப் வீடியோ சொல்கிறது. ஏழுமலையானுக்கே வெளிச்சம். பாடலின் ஆரம்ப சில வினாடிகள் எனக்கு “கொஞ்ச நாள் பொறு தலைவா” பாடலை நினைவுபடுத்தியது. 

பாடலுக்கு சுவராஸ்யம் சேர்ப்பது , கோரஸ் பாடும் ஜதி , அதற்கு இணையாக அவயங்களை அழகாக அசைக்கும் அந்த பரத நாட்டிய மங்கைகள். எல்லாவற்றிக்கும் மேலாக சித்ஸ்ரீராம் . லவ் யூ மேன். பாடலை கேட்கும்போதெல்லாம் சித் ஸ்ரீராம் கண் முன்னே வந்து போகிறார் . தமிழ் சினிமாவைப்போல் ஒரேயடியாக உச்சஸ்தாயியில் கதற விடவோ இல்லை ஹஸ்கி வாய்சில் கலங்க விடவோ செய்யாமல் , இயல்பான துள்ளலுடன்  பாடவிட்டிருக்கிறார் சுந்தர். கூடவே நிறைய வாய்ஸ் வேரியேஷனுக்கு இடம் கொடுத்திருக்கிறார். சித்தின் கெரியரில் கெத்தான பாடல் இது . கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவை  கண்டு பெண்கள் பித்தாக அலைவதாகச் சொல்கிறார்கள். போலவே மேற்படி பாடலில் வரும் ஹீரோயினுக்கு பாசறை எல்லாம் ஏற்பாடாகியிருப்பதாக அறிகிறேன். துயரம். ஒரு காட்சியில் கீரோயின் சிரிக்கிறார் , உவ்வே...ஹேன்ட் பேக்கை அன்ஷிப் பண்ணுவது போல உள்ளது . பிறிதொரு காட்சியில் ஹீரோவைபோல இமிடேட் செய்து நம்மை இரிடேட் செய்கிறார். இதெற்கெல்லாம் பரிகாரமாக சிலவினாடிகள் வரும் ஒரு கருப்பு வெள்ளை காவியத்தை பாடலில் இணைத்திருக்கிறார் இயக்குனர். அபாய வளைவுகளுடன் , அதைவிட அபாயகரமான போஸில் ஹீரோயின் தலை துவட்டும் காட்சியில் இருந்து அதற்கடுத்து வரும் காட்சிகள் பாடலுக்கு வேறொரு mood கொடுக்கிறது. இயக்குனர் “ஹாட்,ஹாட்டர்,ஹாட்டஸ்ட்” நிகழ்ச்சியின் விசிறியாக இருப்பார் என்று சந்தேகிக்கிறேன்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக, தாம் கொண்ட கொள்கையில் அரசு உறுதியாக இருக்குமா இல்லை வழக்கம்போல இம்முறையும் பாலீதின் பைகளைப் போலவே  காற்றில் பறக்க விட்டுவிடுமா என்று தெரியவில்லை. அம்பானி அன்கோ ஆட்டைய கலைக்காமலிருந்தால் சரி. திருப்பூரில் பாலிதீன் பைகள் உபயோகப்படுத்துவது ஓரளவிற்கு மட்டுப்பட்டுள்ளது.  மாநகராட்சி கட்டுப்பாட்டை மீறி பாலீதீன் உபயோகிக்கும் கடைக்காரர்களுக்கு பத்தாயிரம் வரை உடனடி அபராதமாக விதிக்கிறார்களாம். பாத்திரம் எடுத்துட்டு வாங்க தம்பி என்று கறிக்கடை பாயும், கட்டப்பை எடுத்துட்டு வாங்க சார் என்று காய்கறிக்கடை அண்ணாச்சியும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பாலிதீன் பைகளை உபயோகப்படுத்தும் பொதுமக்களிடமும் குற்றவுணர்ச்சியை காண முடிகிறது. ஆனாலும் முற்றாக தவிர்த்ததுபோல தெரியவில்லை . ஆணையை அரசு கடுமையாக அமல்படுத்தட்டும் பார்க்கலாம் என்றும் , அவர்கள் கொடுப்பதை நிறுத்தட்டும் ; நாங்கள் வாங்குவதை நிறுத்துகிறோம் என்ற அலட்சியமுமே மேலிடுகிறது . கடந்த பதினைந்து வருடங்களாகத்தான் பாலிதீன் உபயோகம் இப்படி அதிகரித்திருக்கிறது. ஒரு தலைமுறைக்குள்ளாகவே இப்படி அசுரத்தனமாக வளர்ந்து நிற்கும் பாலீதீனை இனியும் தொடர்வது நமக்கும் நல்லதல்ல நம் சந்ததியினருக்கும் உகந்தது அல்ல. கடந்த இரண்டு வாரங்களாக இறைச்சி வாங்குவதற்கு பாத்திரமும், காய்கறி வாங்க கட்டப்பையையும் தூக்க ஆரம்பித்து விட்டேன் .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

டாட்டா நிறுவனம் இண்டிகா கார் உற்பத்தியை நிறுத்திவிட்டார்களாம். மிகச்சரியாக இருபது வருடங்களுக்கு “T போர்டு மார்க்கெட்டில் கொடி கட்டி பறந்த வாகனம் இண்டிகா. வாடகைக்கார் என்றால் அம்பாசடர் காருக்கு அடுத்ததாக அனைவராலும் அறியப்பட்டது . பொதுவாக டாடா வாகனங்கள் டீ போர்டுக்கென்றது என்றே இன்றளவும் நினைவுகூறப்படுகின்றது. எப்படி பதிந்தது இந்த எண்ணம் என்று தெரியவில்லை. இண்டிகா காரை தனி நபர் உபயோகத்திற்காக வைத்திருந்த ஒருவரைக்கூட என் சுற்றத்தில் காண முடியவில்லை. ஏன் இப்படி ...!? பராமரிப்பு செலவு , மைலேஜ் காரணம் என்றால் ஏன் மாருதி ஆல்டோவை ,மாருதி 800ஐ டீ போர்டில் காணமுடியவில்லை...!?சமீப காலமாக டாடா குழுமத்திலிருந்து அடுத்தடுத்து ஹேட்ச் பேக் கார்கள் வந்துகொண்டிருக்கின்றன. பார்க்கலாம் மக்கள் டாட்டா சொல்கிறார்களா இல்லை வெல்கம் சொல்கிறார்களா என்று .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@.

புதிய அலுவலகத்தில் மலையாள நண்பர் ஒருவர் அமைந்திருக்கிறார். அவசரப்பட்டு குமையவேண்டாம் , அவர் ஆண் நண்பர். அகன்ற மார்பும், அடர்ந்த தாடியும், ஆறடி உயரமும் உள்ள ஆஜானுபாகுவான ஆண் சிங்கம். தோற்றம் கரடுமுரடாக இருப்பினும் , இளகிய மனம் கொண்டவர். கடந்த மாத நேர்பேச்சில் சினிமாக்களை பற்றி சம்சாரித்தபோது. கைவசம் ஏதேனும் மலையாள சினிமாக்கள் இருந்தால் பகிரவும் என்ற வேண்டுகோளுக்கிணங்கி ஏழெட்டு படங்களை உடனடியாக ஷேரிட்டிருந்தார். அதிலிருந்து சப் டைட்டில் உள்ள படமாக பார்த்து , பார்த்துக்கொண்டிருக்கிறேன். முதல் படமாக “ஆதி” பார்த்தேன். மோகன்லாலின் தவப்புதல்வர் நடித்திருக்கிறார். திரிஷ்யம் பட இயக்குனரின் படைப்பு . ஆரம்ப காட்சிகளில் ஜூனியர் லாலின்  குரலும், உடல்மொழியும் திசைக்கொன்றாக கும்மியடிக்கிறது . பெங்களூருக்குள் நுழைந்தவுடன் படம் வேகமெடுக்க ஆரம்பிக்கிறது . கபடி விளையாடிக்கொண்டிருக்கும் விஜய் கட்டிடம் கட்டிடமாக தாண்டியதையே ஆவென்று வாயைப்பிளந்து பார்த்த நமக்கு , தாண்டோட்டம் என்ற தாவுதலையே விளையாட்டாக பயின்றிருக்கும் ஹீரோ பெங்களூருவை தாண்டுவதை யார் நீங்க , எப்படி தாண்டுறீங்க என்ற கேள்விகளுக்கு இடம்கொடுக்காமல் , எளிதாக ஏற்றுக்கொள்ள முடிகிறது .  கிளைமேக்ஸ் தமிழ்சினிமா போல இருந்தாலும் , படம் பார்க்கலாம் ரகம் . சம்பவம் எங்கே , எப்பொழுது , எப்படி நடந்தது என்று முன் கூட்டியே தெரிந்திருந்தாலும் சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். வில்லன்களாக சித்தரிக்கப்பட்ட இருவருக்கும் கட்டுடல்.  சமகால மலையாள சினிமாவை ஒப்பிடும்போது இது சுமார் தான், ஆனாலும் நம்மூரில்  கலை வாரிசுகள் அறிமுகமான முதல் படத்தோடு ஒப்புநோக்கும்போது இப்படம் ஃபார் பெட்டர் .

என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.

Apr 10, 2018

பேசாத வார்த்தைகள் : 04-2018




தண்ணீர் தட்டுப்பாடு , தண்ணீர்ப் போர் வருவதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இப்போதைய பிரச்னை தண்ணீர் கலப்படம். இரண்டு நாளுக்கு முன் வாட்சப்பில் வந்த ஒரு சலனப்படத்தில் , மினரல் வாட்டரில் கால்சியமே இல்லை , பாருங்கள் என்று குண்டு பல்பை வைத்து குண்டு போட்டார்கள். சமீபத்திய இந்து பத்திரிக்கையின் நடுப்பக்கத்திலும் , தலையங்கத்திலும் தண்ணீர்க் கலப்படத்தை பற்றி கவலைப்பட்டிருந்தார்கள். கண்ணுக்கு புலப்படாத ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் துகள்கள் நாம் குடிக்கும் தண்ணீரில் கலந்திருப்பதாக ஆராய்ச்சியில் கண்டறிந்திருக்கிறார்களாம் . எந்த நம்பிக்கையில் குழந்தை , குட்டிகளை பெற்று வைத்திருக்கிறோம் என்று தெரியவில்லை. முன்பெல்லாம் மழை பெய்தால் , ரோட்டில் மண்ணும் , சகதியும் படிந்திருக்கும். ஆனால் இப்பொழுது பிளாஸ்டிக் கவர் தான் பறந்து , பரந்து படிந்திருக்கிறது. வரும் காலத்தில் பிளாஸ்டிக் மழையே பெய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கையை வீசிக்கொண்டு கடைகளுக்கு  செல்வதற்குப்பதில் , கட்டைப்பையை தூக்கிக்கொண்டு போனாலே போதும் நாட்டின் பாதி பாலிதீன்களை ஒழித்துவிடலாம். ஆனால் நம்முடைய அலட்சியமும் , சோம்பேறித்தனமும் எதிர்காலத்தை நிர்மூலமாக்கிக்கொண்டிருக்கிறது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சூரியனார் ஃபுல் பாஃர்மிற்கு வந்துவிட்டார். அதிகாலையில் , பச்சைத்தண்ணீரில் குளித்துக்கொண்டிருக்கும்போதே வியர்த்து கொட்டுகிறது. நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு இரண்டுமணி நேரம் நண்பகலில் டூ வீலரில் சுற்றி வீட்டிற்கு வந்தேன் , அடுத்த நான்குமணி நேரத்திற்கு உலகமே சுற்றிவிட்டது. “ஹீட் ஸ்ட்ரோக்” என்கிற வார்த்தையை சர்வ சாதரணமாக கேட்கமுடிகிறது . அடுத்த இரண்டு , மூன்று மாதத்திற்கு சூதானமாக இருந்துகொள்ளவேண்டும் , இல்லையேல் பஸ்பம்தான். வெயிலுக்கு இதமாக இருக்குமே என்று இளநீர் குடித்தால் , அன்னிச்சை செயலாக கண் இளநீர்க்காரரின் கையை நோக்குகிறது. அருவி எஃபெக்ட். சரி சல்லிசாக கிடைக்கும் தர்பூசணியை சாப்பிடலாமென்றால் தர்பூசணியில் கெமிக்கல் , இன்ஜெக்சன் என்று சித்தமருத்துவர் சிவராமன் பீதியைக்கிளப்புகிறார். எல்லா பக்கமும் முட்டு சந்தாகவே இருந்தால் எங்கதான் போறது யுவர் ஆனர்...!!??
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சார்லி மற்றுமொரு ஃபீல் குட் மலையாளப்படம். 






பேஃஸ்புக் குரூப்பில் சிலாகிக்கப்பட்டிருந்த சார்லியை பார்த்தேன் , பார்க்கிறேன் . பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நேற்றையைப் பற்றிய கவலையும், நாளையப் பற்றிய பயமும் இல்லாமல் அன்றைய, அப்போதைய நிமிடத்தை அனுபவிக்கும் தேசாந்தரி சார்லியாக துல்கர். முன்பின் தெரியாதவர்களுக்கு, தேவைப்படும் நேரத்தில் தக்க உதவிகளைச் செய்து சம்பந்தப்பட்டவர்களை சந்தோஷப்படுத்தி , சலனமில்லாமல் அடுத்தடுத்த இடங்களுக்கு நகர்ந்து கொண்டே இருக்கிறார் . துல்கருக்கு அந்தத் தாடி ஆப்டாக இல்லை . மற்றபடி மனுஷன் நடிப்பில் குறைவைக்கவில்லை. இந்த கதாபாத்திரத்தில் பஹத் நடித்திருந்தால் இன்னும் பெட்டரா இருந்திருக்குமே என்றொரு எண்ணம் வந்துபோனது. சமீபமாக பஹத் பித்து பிடித்தாட்டுகிறது. 

வேலை , வீடு , பேஃஸ்புக் , வாட்சப் என்று செட்யூல்டு வாழ்கையை வெறுத்து , புதிய மனிதர்களையும் , இடங்களையும்  கலையையும் தேடித்தேடி நகரும் டெஸ்ஸா என்ற கதாபாத்திரத்தில் பார்வதி. பார்வையாளனின் மொத்த பார்வையையும் ஒத்தை ஆளாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார் பாவை பார்வதி. என்ட மோளே என்னா நடிப்பும்மா ...! தடித்த பிரேம் கொண்ட மூக்குக்கண்ணாடி , பாதி வெட்டப்பட்டு காற்றில் கவிதை  வரையும்  கேசம் , ரிலாக்ஸ்டான ட்ரெஸ்சிங் , பெரிய சைஸ் மூக்குத்தி என்று  டெஸ்சாவின் அவுட்லுக் அட்டகாசமாக இருக்கிறது. கிட்டத்தட்ட அரை இன்ச் போல்டு சைசிற்கு இருக்கும் மூக்குத்தி மற்ற நடிகைகளுக்கு எந்த அளவிற்கு பொருந்தும் என்று தெரியவில்லை. சமீபத்தில் வந்த விக்ரம் வேதாவில் மாதவன் ஜோடியாக நடித்திருந்த ....ஸ்ரீநாத் “இருக்கு ஆனா இல்லை” என்பதுபோல  மெல்லியதாக மூக்குத்தி அணிந்திருப்பார்  அதைத்தவிர வேறெந்த நடிகையும் மூக்குத்தி அணிந்திருந்ததாக தெரியவில்லை. தர்ஷினிக்கு மூக்குத்தி அணிவிக்கவேண்டுமேன்று ஆசையுண்டு .அதற்கு முன்பாக காது குத்தவேண்டும்.

பிரதான கதாபாத்திரங்களின் சித்தரிப்பு , தமிழில் வெளிவந்த “180” ரூல்ஸ் கிடையாது என்ற படத்தினை நினைவுபடுத்துகிறது. சார்லி தங்கிச் சென்ற அறைக்கு குடிவரும் டெஸ்ஸா , காமிக்ஸ் போன்று வரையப்பட்ட ஒரு ஓவியத்தொகுப்பினை காண்கிறார். அந்த ஓவியம் ஒரு கதையைச் சொல்லி, பாதியோடு நிற்கிறது . கதையின் மீதியையும்,  சார்லியையும்  தேடி புறப்படும் டெஸ்ஷாவின் பயணமே மீதிப்படம். திருடன் , படகோட்டி, குஞ்சப்பன் , கனி என்று அனைத்து கதாபாத்திரங்களுமே கச்சிதம் . பத்ரோஸ் , குயின்மேரி எபிசோடு ஒரு துயரக் கவிதை .

ஓவியம் தொடர்பான காட்சிகள் வரும் போதெல்லாம் ஒலிக்கும் பின்னணி இசை பிரமாதம்.கோபி சுந்தரின் இசை கொடி கட்டிப் பறக்கிறது . மால்குடி சுபாவின் அமர்க்களமான குரலில் ஒலிக்கும் “அகலே யாரோ பாடும் பாடல்” கேட்பதற்கு ஆஹா...!!! .விஷூவல்ஸ் வாவ்.!!! சக்திஸ்ரீகோபாலனின் “புலரிகளோ” சுகம். மேற்படி பாடலின் ஆரம்பத்திலும் , இடையிடையேயும் ஒலிக்கும் இஸ்லாமிய சேர்ந்திசை கேட்பவர்களுக்கு புதிய அனுபவத்தினை வழங்குகிறது. ஸ்ரேயாகோஷலின் “புதுமழை” – ஜன்னலோர சாரல்.
 
துல்கரின் அறை , அந்த ஸ்கூட்டர் ஓவியம் , மரப்படகு , சோமபானம் விற்பனை நடக்கும் வீட்டின் வெளிப்புறம் என்று படத்தில் அட போடவைக்கும் அஃறிணைகள் அதிகதிகம். ஆர்ட் டைரக்டருக்கு பூச்செண்டல்ல ஆளுயர மாலையே கொடுக்கலாம். படம் எடுக்கப்பட இடங்களுக்கு போக வேண்டுமென்ற எண்ணத்தினை அநேகக் காட்சிகள் , பார்வையாளருக்கு அன்னிச்சையாக ஏற்படுத்துவது ஒளிப்பதிவிற்கு கிடைத்த மகத்தான வெற்றி.

செல்போன் சிம்மை உடைத்து விட்டு தோழியிடம் பழிப்புக் காட்டுவது , புலரிகளோ பாடலில் வரும் தலையாட்டி பொம்மையின் அசைவிற்கேற்ப ஆடுவது , பூரம் திருவிழாவில் துல்கரிடம் தான் டெஸ்ஸா இல்லை என்று சொல்லி , அவரின் ஏமாற்றத்தை ஓரக்கண்ணால் ரசிப்பது என்று பல காட்சிகளில் பரவசப்படுத்துகிறார் பார்வதி. டேக் ஆஃபின் சமீராவே இன்னும் நினைவுகளை விடு அகலவில்லை. கூடுதலாக இப்பொழுது டெஸ்சாவும். பார்வதியின் மேஜிக்கை அனுபவிப்பதற்காகவே இன்னுமொருமுறை படத்தை பார்க்கவேண்டும். குறிப்பாக கிளைமேக்ஸில் வரும் தமிழ் வசனங்களும் , பார்வதி , துல்கரின் முகபாவங்களும் பால்பாயச முந்திரி. 

சார்லியில் வரும் எந்தவொரு முதன்மைக்  கதாபாத்திரங்களோடும் உங்களைப் பொருத்திக்கொள்ள முடியாது . அப்படியான கதாபாத்திரங்களை உங்கள் வாழ்வில் சந்தித்திருப்பதற்கான சாத்தியமும் சொற்பமே. ஆனாலும் படம் உள்ளுக்குள் ஊடுருவுகிறது.

 என்றென்றும் புன்னகையுடன்
 ஜீவன்சுப்பு.

Mar 27, 2018

பேசாத வார்த்தைகள் : 03-2018


மாநகரக் குப்பைகள் போல வந்து குவியும் வாட்சப் பகிர்தல்களில், எப்பொழுதாவது முத்துப்போல உருப்படியான தகவல்கள் சிக்குவதுண்டு, அப்படியொரு முத்துதான் “இட்லி தோசை”- (“ID”) நிறுவன ஸ்தாபகர்களில் ஒருவரின் காணொளி. ஜிமிக்கி கம்மலாலும் , புருவ உயர்த்தல்களாலும் மாநிலம் தழுவிய மதிமயக்கத்திற்கு வித்திட்ட மங்கையர்களை வழங்கிய, கடவுளின் தேசமான கேரள நன்னாட்டில் பிறந்த இளைஞர் தான் மேற்படி இட்லி தோசை நிறுவனர் முஸ்தபா. 






ஹார்வார்டு பிசினஸ் ஸ்கூலில் அவர் ஆற்றிய உரைதான் கட்செவி அஞ்சலில் பகிரப்பட்டிருந்தது . வழமையான பிசினஸ் வெற்றியாளர்களின் வீர உரை போலில்லாமல் , நாடி. நரம்புகளை புடைக்கவைத்து , கனவுலகில் கணநேர சூர்யவம்சம் சரத்குமாராய் “லாலா லாலா” பாடவைக்காமல் ரெம்ப எதார்த்தமான பேச்சு. மெல்லிய நகைச்சுவை இழையோட, மென்மையான குரலில் , தன்மையான உடல் மொழியோடு வழங்கிய உரை வசீகரம். பதினைந்து நிமிட உரையில் மூன்று முக்கியமான தகவல்களை முன்னிறுத்துகிறார். அவசியம் பார்க்க வேண்டிய காணொளி.
யூ டியூப் : https://www.youtube.com/watch?v=01_eOCGNYN8
இணையதளம் : https://www.idfreshfood.com/

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


சமீபத்தில் அலுவல் நிமித்தம் பெருந்துறை சென்றிருந்தபொழுது , மதிய உணவிற்கான உணவக விசாரிப்பில் கண்டடைந்தது சக்தி மெஸ். பெருந்துறை டூ கோவை பிரதான சாலையில் , சுங்கச்சாவடிக்கு அடுத்த நால் ரோட்டின் வலதுபுறம் கார்னரில் அமைந்துள்ளது குடிசை வேயப்பட்ட இந்தக் கடை. அரைமனதுடன் உள்ளே நுழைந்தால், கல்யாண வீடு போல , சாப்பிடுபவர்களின் பின்னால் நின்று கொண்டிருக்கிறார்கள் அசைவப் பிரியர்கள். பதினைந்து நிமிடக் காத்திருப்புக்கு பின் இருக்கையைக் கைப்பற்றி இரைப்பையை நிறைத்துகொண்டோம்.

சாப்பாடு கொஞ்சம் பதமாக இருந்தது , ஆனால் , அசைவச் சாப்பாட்டிற்கு அதுதான் சரியான பதமென்று பக்கத்து இலை பரிந்தார். குடும்ப உறுப்பினர்கள் , பெரும்பாலும் பெண்கள் இணைந்து நடத்துகிறார்கள். நாங்கள் சென்றிருந்த சமயம் கரை வேஷ்டிகள் கூட்டம் குழுமியிருந்தது. பக்கத்தில் கட்சி மாநாடாம். தண்ணீரோடு  கரைபுரண்டோடிய கரை வேஷ்டிகளின் கலாட்டாக்களை வெகு நாசூக்காக , சிரித்துக்கொண்டே சமாளித்த அக்காக்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள்.  மட்டன் குழம்பு , மீன் குழம்பு , கோழிக்குழம்பு , எலும்பு ரசம் , தயிர் இதுதான் வரிசை. நிறைவாக பாயசமும் உண்டு. உணவகத்தின் சிறப்பே மசாலாதான். “இனியொரு விதி”யெல்லாம் செய்யாமல் அவர்களே மசாலா அரைத்து சமைக்கிறார்கள். வயிற்றிற்கும், பர்சிற்கும் பங்கமில்லாத கடை.

நல்லா கார சாரமாய் உணவருந்துபவர்களுக்கான அமுத சுரபி சக்தி மெஸ் . அதே நேரம் , காரம்னா காத தூரம் ஓடுபவர்களுக்கு உகந்த இடமல்ல இது. நல்லா ருசியா இருக்கே என்று நாட்டுக்கோழியுடன் ஒரு வெட்டு வெட்டி வெளியே வந்தால். நாக்கை வெட்டிப் போட்டுவிடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு காரம் கபடி விளையாட ஆரம்பித்துவிட்டது. அடுத்த இரண்டு நாட்களுக்கு பால், பழம் தயிர் என்று சமாளித்து நாக்கை நார்மல் மோடுக்கு வரவேண்டியதாகிவிட்டது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


வழக்கம் போல, இந்த ஆண்டும் நியூ இயர் ரிசொல்யூஷன் நீர்த்துப்போயிற்று. தினசரி, வாரம், மாதம் , காலாண்டு என்று அட்டவணை எல்லாம் வக்கணையாகத்தான் போட்டேன். நடைமுறையில் பிம்பிளிக்கி பிளாக்கி ஆகிவிட்டது. “ஒரே ஒரு குருக்கள் வரார்”ன்ற மாதிரி  ஒரே ஒரு பதிவு , ஒரே ஒரு படம் அவ்வளவுதான். காலாண்டு முடிந்துவிட்டது. காலரைப் பிடித்து யாரும் கேட்கப் போவதில்லைதான் , இருந்தாலும் இதுபோல பொதுவெளியில் எழுதி வைக்கும்போது கொஞ்சம் உறுத்தல் வந்து பாதியையேனும் பாலோ செய்துவிடலாமே என்ற நப்பாசைதான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 


கடந்த வாரம், சென்டிமென்டல் பயணமாக பழனி போய் வந்தேன். இது மூன்றாவது வருடம் . நடராஜா சர்வீசில் , பேருந்து நிலையத்திலிருந்து பழனி மலை உச்சியை அடைவதற்கு  இரண்டு மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. இடையிடயே இளைப்பாறல் வேறு. உடம்பு வெகுவேகமாக பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. வழமை போல சேட்டன்களும் , சேச்சிகளும் சாரை சாரையாக படையெடுக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் கோவில்களில் இலவச தரிசன வரிசையில் போவதுதான் எளிதாகவும் , விரைவாகவும் இருக்கிறது . பணத்தைக் கொடுத்து எல்லாவற்றையும் எளிதாக, விரைவாக வாங்கிவிடவேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் அதிகரித்ததன் விளைவு இது. போலவே , மருத்துவமனைகள் , பள்ளிக்கூடங்களிலும். இது சரியான போக்காக தெரியவில்லை. கடந்த முறை போல அன்னதானத்திற்கு ஆசைப்பட்டு சிறையில் சிக்காமல் , உண்டச் சோறுடன் தப்பித்தாயிற்று . வெறும் கருப்பட்டிக் கூழை தகர டப்பாக்களிலும், பிளாஸ்டிக் டபாக்களிலும் அடைத்து பஞ்சாமிர்தம் என்று விற்பனை செய்யும் தேவஸ்தான கடைகளை முருகர் மன்னிப்பாராக. அதே  நேரம் மலையடிவாரத்தில், சித்தனாதன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் – அமிர்தம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

என்றென்றும் புன்னகையுடன்.,
ஜீவன்சுப்பு

Mar 22, 2018

பேசாத வார்த்தைகள் : 02-2018


பேசாத வார்த்தைகள் : 02-2018



பயணமும், வாசிப்பும் தான் ஒரு மனிதனை முழுமையாக்குகின்றன என்று வாசித்த நினைவு. சத்தியமான வார்த்தைகள். குறிப்பாக திட்டமிடாத பயணமும் , வாசிப்புமே அனுபவத்தை அள்ளித்தருகின்றன. பயணம் சார்ந்த படங்கள் பெரும்பாலும் சிலாகிக்க தகுந்தவையாகவே இருக்கும் என்பது என் எண்ணம். பலதரப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட  கதாபாத்திரங்கள் படத்திற்கு  சுவாராஸ்யம் கூட்டும். தமிழில் வந்த எங்கேயும் எப்போதும் , அன்பே சிவம் இரண்டுமே எனக்கு மிக நெருக்கமான படங்கள் . குறிப்பாக எ.எ ல் வரும் பயணக் கதாபாத்திரங்கள் . தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்ட அழகான கவிதைக்கு ஒப்பானது .

நார்த் 24 காதம் என்ற மலையாளப் படத்தினை தீபாவளிக்கு முதல் நாள் நள்ளிரவில் பார்க்க வாய்த்தது. அழகான ஒரு ரோட் மூவி . ஃபகத் ஃபாசிலின் நடிப்பை மகேஷிண்டே பிரதிகாரம் மற்றும் ஐந்து சுந்தரிகளின் ஒரு எபிசோடில்  ஏற்கனவே பார்த்து ரசித்த அனுபவமுண்டு . மேற்படி படத்தை பார்க்க ஆரம்பித்த போது , யாருடா இது , ஃபகத்திற்கு போட்டியா நடிக்கிறான் என்று வியந்து , டைட்டில் கார்டில் ஃபகத் பேரை பார்த்து பல்பு வாங்கினேன். நம் வருங்கால முதல்வர்கள் எல்லாம் ஒன்று ஓவர் ஆக்டிங் செய்கிறார்கள் இல்லை ஆக்டிங்குற பேர்ல ஆக்ஸா பிளேடை நடு மார்பிலே சொருகுகிறார்கள் . ஃபகத் பாத்திரத்திற்கு தேவையான நடிப்பை ரெம்ப shuttle ஆக , ரசிக்கும் விதமாக கொடுக்கிறார்  . பெண் ரசிகைகள் அதிகமென்று கேள்விப்பட்டதுண்டு , சக ஆண்களுக்கே பிடிக்கும்போது பெண்களுக்கு பிடிப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

படத்தின் ஆச்சர்யம் நாராயணியாக நடித்திருக்கும் சுப்பிரமணியபுரம் சுவாதிதான் . நெடுமுடி வேணு , ஃபகத் என Established நடிகர்களுக்கு மத்தியில் எறங்கி அடித்து அசத்தியிருக்கிறார் . So cute என்று சொல்லும்போதெல்லாம் So க்யூட்டாக கவர்கிறார். நல்லவேளை தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.

பிரயாணத்தில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களுமே படத்தை அழகாக்குகின்றனர். நடிகர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு இசையும் , ஒளிப்பதிவும் பிரயாணம் செய்திருக்கிறது . இசை கோவிந்த் மேனன் . கிளைமேக்சிற்கு கொஞ்சம் முன்னே, பின்னிரவில் , காலிகட்டிலிருந்து நெடுமுடி வேணுவின் வீட்டிற்கு மூவரும் ஆட்டோவில் பிராயணிக்கும் பத்து நிமிடங்களும் உருக்கமான , நெகிழ்வான நிமிடங்கள். அந்த பத்து நிமிடங்களுக்கும் வரும் பின்னணி இசை ஒரு மென் சோகக் கவிதை . அதற்கடுத்த பத்து நிமிடங்கள் ஆதுரமான ஸ்பரிசம். கிளைமேக்ஸ் சுகம். அவசியம் பாக்கவேண்டிய ஒரு ஃபீல் குட் மூவி.

என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு